
தமிழர் திருநாள் பொங்கலில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று. இதற்காக பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான விழாவல்ல என்றும் நீங்கள் அண்மையில் எழுதியிருப்பது தமிழ் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் நீர்க்க அடித்து வீடாதா?
தமிழர்களுக்கு என்று தனி கலாச்சாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆச்சாரம்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வழக்கம்.
இதை மீறி தமிழர்களுக்கு என்று தனியான ஒரே பொது அடையாளம் மொழி மட்டும்தான்.
ஜாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் அற்று எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதைதான் நாம் தமிழர் அடையாளம் என்று சொல்லமுடியும்; ஆனால் பொங்கலும் அப்படியில்லை.
பொங்கல் விவசாயிகளின் திருநாள் என்பது உண்மைதான். நிலம் உடைய விவசாயிகள் விசேஷமாக கொண்டாட, நிலமற்ற விவசாயிகள் உறுதுணையாக இருக்கிற விழாவாகத்தான் பொங்கல் இருக்கிறது.
ஆண்டையிடம் கைகட்டி ‘இனாம்’ வாங்கி கொண்டாட வேண்டிய அவல நிலையில்தான் தாழ்த்தப்பட்ட தமிழர்களை இதர தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஏற்றத் தாழ்வுகள் அற்ற பொங்கல் கொண்டாட வேண்டுமென்றால், விவசாயத்தில் 99 சதவீதம் தங்கள் உழைப்பை செலுத்துகிற விவசாயிகளான நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமாக என்று நிலம் கிடைக்கிறதோ, அன்றுதான் பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களின அடையாளமாக அறியப்படும்.
அதுவரை அரசு நடத்துகிற ‘சுற்றுலாபொருட்காட்சி’தான் பொங்கலை விட சிறந்த ‘தமிழர்திருவிழா’ என்பேன்.
***
காரை மைந்தன் என்பவர் என்னிடம் தொலைபேசியில் “தமிழர் தொலைநோக்கு என்கிற ஒரு இதழை நான் நடத்துகிறேன். அதில் பாரதி குறித்த உங்களின் நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்புகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். பிறகு நேர்காணலுக்காக நேரில் சந்தித்தபோது கேள்விகள் தயாராக இல்லாததால், சில கேள்விகளை எழுதி எனக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.
அவர் அனுப்பி வைத்த கேள்விகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நான் பதில் எழுதியிருந்தேன்.
இந்தப் பதில்களை 2008 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதத்தில் முழுவதுமாக பிரசுரித்து இருந்தேன். இதில் சொல்லப்பட்ட பதில்கள் கூடுதல் கவனம் பெறவேண்டும் என்ற காரணத்தால், இப்போது அதை ஒவ்வொரு கேள்வி-பதிலாக பிரசுரித்து இருக்கிறேன்.
-முற்றும்
தொடர்புடையவைகள்:
பாரதியின் ஜாதிய ஒற்றுமையும் – பாரதிதாசனின் ஜாதி ஒழிப்பும்
‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’
